Latest
Loading...

22 September 2017

இவ்வளவு காலம் பூமியில் வாழ்ந்தும் கூட 'இதை' நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லை.!

0 Views
ஆடைகளின்றி திரிந்த காலத்தில் கூட, ஆறாம் அறிவை கொண்டிருந்த காரணத்தினால் தான் என்னவோ, மனித இனம் இன்று செயற்கை நுண்ணறிவு தாண்டி ஏழாம் அறிவை தேடும் பயணத்தில் ஈடுபட்டுள்ளது - இருந்தும் புண்ணியமில்லை.


பக்கத்து தெருவிற்கு போகாதவன், பசிபிக் பெருங்கடலின் மறு எல்லைக்கு போக ஆசைபட்டானாம் என்பது தான் பூமி கிரக வாசிகளாக நமது நிலைப்பாடு, புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.


ஒருபக்கம், 1990-ல் இருந்து சுமார் 13.3 மீட்டர் (43.5 அடி) நீளம் அதாவது ஒரு பெரிய ஸ்கூல் பஸ் அளவிலான ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி ஒளியாண்டுகளை கடந்து ஆய்வு செய்துகொண்டிருக்கிறது. மறுபக்கம், செவ்வாய் கிரகத்தில் க்யூரிசிட்டி ரோவர் தன்னந்தனியாக உலாவிக் கொண்டிருக்கிறது, சமீபத்தில் காசினி விண்கலம் சனிக்கோளின் மீது திட்டமிடப்பட்ட மோதலை நிகழ்த்தி தனது 43 ஆண்டுகால ஆய்வை முடித்துக்கொண்டது.


மாற்றுக்கருத்து இல்லை.!

இப்படியாக, தொலைதூர இலக்குகளையே எப்போதும் குறிவைக்கும் மனித இனம் பூமி சார்ந்த முழுமையான புரிதலை பெற்றுவிட்டதா.? என்று கேட்டால், அதற்கு பதில் - இல்லவே இல்லை. இந்த பூமி கிரகத்தை - மேற்பரப்பில் இருந்து மையப்பகுதி வரை - நாம் பல ஆய்வுகளுக்கு உட்படுத்தியுள்ளோம்; அதீத அறிவியல்-தொழில்நுட்ப அறிவின் வாயிலாக பல எண்ணற்ற விடயங்களை கண்டறிந்துள்ளோம் என்பதில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.

விசித்திரமான மர்மங்களும், புதிர்களும்.!

அதேபோல இந்த பூமியானது, இன்றும் தன்னுள் பல கண்டறிய முடியாத மர்மங்களையும், கண்டறிந்தும் புரிந்துகொள்ள முடியாத ஆச்சரியங்களை கொண்டுள்ளது என்பதையும் மறுக்க முடியாது. அப்படியான சில விசித்திரமான மர்மங்களும், புதிர்களும் தான் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. அவைகளையெல்லாம் அறிந்துகொண்ட பின்னர், பூமி மீதான உங்களின் பார்வையும், பூமியில் உங்களது இருப்பு சார்ந்த கோணமும் முற்றிலும் மாறும் என்பது உறுதி.


விலகாத மர்மம் #01

பூமி கிரகத்தின் உட்புற மையம் திடமானதாக இருக்க, வெளிப்புறமானது திரவ மற்றும் உருகிய நிலையில் இருக்கும் என புவி ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். அதற்கு இடையில் இருக்கும் - மூடகம் (mantle) அதாவது, பூமியின் மையப் பகுதிக்கும், மேல் ஓடுக்கும் திரையில் அமைந்திருக்கும் இந்த பகுதியானது எதனால் உருவானது என்பதை நம்மால் கண்டறிய முடியவில்லை; ஏனெனில் அந்த அளவிலான ஆழத்தை நம்மால் எட்ட முடியவில்லை.


ரஷ்யாவின் கோலா பாஹோஹோல்.!

பூமி கிரகத்தின் மூடகம் (mantle) சுமார் 30 கிமீ முதல் 2,900 கிமீ வரை ஆழமானது என்பதும், வெறும் 12.3 கிமீ ஆழம் கொண்ட ரஷ்யாவின் கோலா பாஹோஹோல் தான் உலகின் மிக ஆழமாக தோண்டப்பட்ட பகுதி என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. ஆக, நாம் கூறிக்கொள்ளும் அதீத தொழில்நுட்ப வளர்ச்சியின் வீச்சு வெறும் 13 கிமீ கூட இல்லை என்பதை நாம் இங்கு உணர்ந்துகொள்ள வேண்டும்.


விலகாத மர்மம் #02

புவியின் காந்தப்புலமானது பூமியின் உட்பகுதியிலிருந்து விண்வெளிக்கு வெளியேறும் ஒரு காந்த சக்தியாகும். இதுதான், சூரிய வளிமண்டலத்திலிருந்து வெளியாகும் சூரிய காற்று மற்றும் மின்னூட்டத்துகள்களிடம் இருந்து பூமி கிரகத்தை பாதுகாத்து வருகிறது. சமீபத்தில் இந்த காந்த துருவங்களானது நகரும் என்றும், தனது திசையை மாற்றியமைத்துக் கொள்ளும் என்று கண்டறியப்பட்டது.


அநேகமாக மீண்டும் நிகழும்.!

பூமி கிரக வரலாற்றில், இந்த நிகழ்வு பல முறை நடந்திருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கடைசியாக சுமார் 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிகழ்வு நடந்துள்ளது, அநேகமாக அது மீண்டும் நிகழும் என்பது வரை நாம் கண்டறிந்து விட்டோம். ஆனால், இது ஏன் நிகழ்கிறது.? எதனால் நிகழ்கிறது.? எப்படி நிகழ்கிறது என்பது எவருக்கும் தெரியாது.


விலகாத மர்மம் #03

சுமார் 4.6 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, நமது பூமிக்கு மொத்தம் இரண்டு நிலவுகள் இருந்துள்ளதாக வானியலாளர்கள் கூறுகின்றனர். அவைகள் ஒன்றோடு ஒன்று மோதிக்கொள்ளும் வரையிலாக, கூறப்படும் அந்த இரண்டாவது நிலவானது தற்போதுள்ள நிலவின் அதே சுற்றுப்பாதையில் சுமார் 1,200 கி.மீ தொலைவில் இருந்திருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.


தீர்க்கமான ஆய்வுகள் ஏதுமில்லை

நமது நிலவின் இரு பக்கமும் மிகவும் விசித்திரமாக இருப்பதற்கு, இந்த மோதல் ஒரு பிரதான காரணமாக இருக்குமென்றும் நம்பப்படுகிறது. ஆனால் இது சார்ந்த தீர்க்கமான ஆய்வுகள் ஏதுமில்லை, இன்னும் சொல்லப்போனால் பூமிக்கு அடுத்தபடி வாழ்வாதாரம் வழங்கும் அருகாமை கிரகமான நிலவின் மீது மனித இனம் அதிக ஆர்வம் காட்டவில்லை என்பதே நிதர்சனம்.


பூமியின் புதிர் #01

நமது பூமி, மணிக்கு 1,600 கிமீ வேகத்தில் சுழல்கிறது. அதைவிட வேகமாக மணிக்கு 108,000 கிமீ என்ற வேகத்தில், பூமி கிரகம் சூரியனை சுற்றுகிறது. ஆனால், நாம் இந்த இரண்டு வேகத்தினையும் உணர்வதே இல்லை. அதற்கு காரணம் - நிலையான வேகம் மற்றும் புவியீர்ப்பு சக்தி தான். இந்த குறிப்பிட்ட வேகம் மாறும் வரை பூமியின் சுழற்சியை, அதாவது இயக்கத்தை நாம் உணர மாட்டோம். வேகத்தின் நிலைப்பாடு முன்பின் தவறினால் நமக்கு தலை சுற்றுவது உறுதி.!


பூமியின் புதிர் #02

சுமார் 620 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் என்பது 21.9 மணி நேரம் என்று நீடித்துள்ளது. அதாவது பூமி வேகமாக சுழன்றுள்ளது, அவ்வண்ணமே பூமி படிப்படியாக அதன் சுழலும் வேகத்தை குறைத்து கொண்டே வருகிறது என்பதை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது.

எதிர்காலத்தில்..

ஆக, ஒவ்வொரு 100 ஆண்டுகளுக்கும் 70 மைக்ரோ நொடிகள் என்ற விகிதத்தில் நேரம் அதிகரித்து, கிட்டத்தட்ட 100 மில்லியன் ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாள் 24 மணிநேரம் என்ற நிலைக்கு பூமி வந்துள்ளது. எதிர்காலத்தில், அதாவது அடுத்த 100 மில்லியன் ஆண்டுகள் கழித்து பூமியில் ஒரு நாள் என்பது 28 மணி நேரமாக கூட ஆகலாம்.


பூமியின் புதிர் #03

பண்டைய பூமி கிரகத்தின் செடிகள், குளோரோபிளை (பச்சையம்) உறிஞ்சலுக்கு பதிலாக ரெட்டினல் (Retinal) தனை பயன்படுத்திய காரணத்தினால் ஊதா நிறத்தில் இருந்துள்ளன. இந்த விளைவினால் செடிகள் பச்சை நிறத்திற்கு பதிலாக சிவப்பு மற்றும் நீல நிறத்தை பிரதிபலிக்கச் செய்துள்ளன. இன்றும் சில பாக்டீரியாக்கள் ரெட்டினல்தனை பயன்படுத்தப்படுகின்றன.

Thanks for your Visiting..Keep it up.Thank q.Share the News. :) :)

மட்டக்களப்பு “ஜிமிக்கி கம்மல்” வீடியோ பாடல்! (Video)

அண்மையில் சமூக வலைதளங்களில் வேகமாக வைரல் ஆகி வரும் ஜிமிக்கி கம்மல் இலங்கையின் பாணியில் மட்டக்களப்பு நூதனன் கலைஞர்களால் படைக்கப்பட்டிருக...